×

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: போலி ஐஏஎஸ் கைது


திருச்சி: திருச்சி  மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(45). ஸ்ரீரங்கம் மாணிக்கம்பிள்ளை தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(41). கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தார். அப்போது தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கிருஷ்ணவேணியிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து அவரது கடைக்கு பிரகாஷ் வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.அப்போது கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவுப்பிரிவான ”ரா” பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.

இதை நம்பிய கிருஷ்ணவேணி, 2021ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி வரை பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தார். இதனால் பிரகாஷ் தன்னை ஏமாற்றியதை தெரிந்ததும் திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்டது ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் என்பதும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வைகை நகர் பகுதியில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று பிரகாஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: போலி ஐஏஎஸ் கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Trichy ,Krishnaveni ,Chinnakannu Topa ,Trichy Melur ,Srirangam Manikampillai Street ,Erode ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை...